முகலிவாக்கத்தில் மகளிர் விடுதியில் பெண்ணை கொடூரமாக தாக்கியவரால் பரபரப்பு - சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்


முகலிவாக்கத்தில் மகளிர் விடுதியில் பெண்ணை கொடூரமாக தாக்கியவரால் பரபரப்பு - சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்
x
தினத்தந்தி 13 Oct 2023 8:57 AM GMT (Updated: 13 Oct 2023 10:59 AM GMT)

முகலிவாக்கத்தில் மகளிர் விடுதியில் பெண்ணை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை

சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் கிருஷ்ணவேணி நகரை சேர்ந்தவர் கணபதி ஜானகி (வயது 45). இவர், முகலிவாக்கத்தில் மகளிர் தங்கும் விடுதி நடத்தி வந்தார். இங்கு 400-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி இருந்தனர். கொரோனா காலத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தூத்துக்குடியை சேர்ந்த பரமசிவன் (40) என்பவரிடம் விடுதி நிர்வாகத்தை ஒப்படைத்தார்.தற்போது விடுதி நல்ல நிலையில் செயல்பட்டு வருவதால் விடுதியை மீண்டும் தன்னிடம் கொடுத்து விடுமாறு கணபதி ஜானகி கேட்டார். அதற்கு பரமசிவன் மறுப்பு தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடுதிக்கு வந்த கணபதி ஜானகி, தான் இந்த விடுதியை பராமரித்து கொள்வதாகவும், அங்கு தங்கி உள்ள பென்களிடம் மாத கட்டணத்தை தனது வங்கி கணக்கில் செலுத்துமாறும் கூறியதாக தெரிகிறது. இதனால் கணபதி ஜானகி, பரமசிவன் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பரமசிவன், கணபதி ஜானகியை விடுதி அலுவலகத்தில் வைத்து சரமாரியாக கொடூரமாக தாக்கினார். இது குறித்த புகாரின்பேரில் மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரையிலும் பரமசிவனை போலீசார் கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் விடுதி அலுவலகத்தில் கணபதி ஜானகியை சரமாரியாக தாக்கிய பரமசிவம், காலால் எட்டி உதைத்தும், கழுத்தை நெரித்தும், கொடூரமாக தாக்கும் காட்சிகள், விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story