மதுரவாயலில் போலி துப்பாக்கியை காட்டி வியாபாரிகளிடம் மாமூல் வசூலித்தவர் கைது


மதுரவாயலில் போலி துப்பாக்கியை காட்டி வியாபாரிகளிடம் மாமூல் வசூலித்தவர் கைது
x

மதுரவாயலில் போலி துப்பாக்கியை காட்டி வியாபாரிகளிடம் மாமூல் வசூலித்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

சென்னை மதுரவாயல், கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் மர்மநபர் ஒருவர் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு வியாபாரிகளிடம் மாமூல் வசூலித்து வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து மதுரவாயல் துணை கமிஷனர் குமார், உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் கோபால் ஆகியோர் தலைமையில் மதுரவாயல் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபரை தீவிரமாக தேடிவந்தனர்.

விசாரணையில் வியாபாரிகளிடம் துப்பாக்கியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டியது மதுரவாயல், ஆலப்பாக்கத்தை சேர்ந்த செல்வம் என்ற ரோஸ் பாக்கியம் (வயது 43) என்பதும், அவர் கையில் வைத்திருந்தது போலி துப்பாக்கி என்பதும் தெரிந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் 200 கிராம் வெடி மருந்துகளையும் பறிமுதல் செய்தனர். செல்வத்தை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.


Next Story