மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி இடையே புதிய அகல ரெயில்பாதை அமைக்க வேண்டும்


மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி இடையே புதிய அகல ரெயில்பாதை அமைக்க வேண்டும்
x

கோட்டூர் வழியாக மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி இடையே புதிதாக அகல ெரயில் பாதை அமைக்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூர்

கோட்டூர்:

கோட்டூர் வழியாக மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி இடையே புதிதாக அகல ெரயில் பாதை அமைக்க வேண்டும் என ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோரிக்கை மனு

திருவாரூர் மாவட்ட ெரயில் உபயோகிப்பாளர் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் மத்திய ெரயில்வே அமைச்சகம், ெரயில்வே நிலைய குழு, திருச்சி தெற்கு ெரயில்வே பொது மேலாளர் அலுவலகம் ஆகியவைக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளது. இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வட்டங்கள்

வியாபார ரீதியிலும், சுற்றுலா ரீதியிலும் பயணிகள் அதிகமாக பயணிக்கும் விதத்திலும் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது.

ரெயில் பாதை

இந்த இரண்டு வட்டங்களுக்கான ரெயில் போக்குவரத்தை மேம்படுத்தினால் திருத்துறைப்பூண்டி நகரத்தின் வளர்ச்சி அதிகரிக்கும்.மன்னார்குடி வரை உள்ள அகல ெரயில் பாதையை, பட்டுக்கோட்டையுடன் இணைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. இதனை மாற்றி, கோட்டூர் வழியாக திருத்துறைப்பூண்டியுடன் மன்னார்குடிக்கு ெரயில் பாதை அமைத்ததால் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை ஆகிய பகுதி மக்களும் பயன் அடைவார்கள். சென்னை முதல் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மிகப்பெரிய ெரயில் சுற்றுப்பாதை அமையும்.

வளர்ச்சி தடைப்படும்

ஏற்கனவே திட்டமிட்டபடி மன்னார்குடி,பட்டுக்கோட்டை இடையே அகல ரெயில் பாதை ஏற்படுத்தினால், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகள் புறக்கணிக்கப்படும் நிலை உருவாகும். இதனால் இப்பகுதி வளர்ச்சி தடைப்படும்.

திருவாரூர் முதல் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி வரை தற்போது அகல ெரயில் பாதை பணி நிறைவடைந்து ரெயில் போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு இணைப்பு ஏற்படுத்துவதை விட கோட்டூர் வழியாக திருத்துறைப்பூண்டிக்கு இணைப்பை ஏற்படுத்தினால் அதிக மக்கள் பயன் அடைவார்கள்.

எளிதாக கொண்டு செல்ல முடியும்

திருத்துறைப்பூண்டியின் கிழக்கு பகுதியில் உள்ள வேதாரண்யம், அகத்தியம்பள்ளி, கோடியக்கரை வரையிலான ெரயில் பாதை திருத்துறைப்பூண்டியுடன் இணைவதால், திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையம் பயணிகள் அதிகமாக வந்து செல்கின்ற வழித்தடமாக அமையும்.மேலும் வேதாரண்யம் பகுதியில் மல்லிகைப்பூ, சணல், சவுக்கு, புகையிலை, தேங்காய், மாங்காய், முந்திரி, காய்கறிகள், உப்பு, சிலிக்கான் மண் உள்ளிட்டவைகளை தமிழகம் முழுவதும் எளிதாக கொண்டு செல்ல முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story