தெருவில் நின்ற குழந்தையை கடத்த முயன்ற வடமாநில வாலிபர் கைது


தெருவில் நின்ற குழந்தையை கடத்த முயன்ற வடமாநில வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Sep 2023 7:30 PM GMT (Updated: 12 Sep 2023 7:31 PM GMT)

ஓமலூர் அருகே தெருவில் நின்ற 3 வயது குழந்தையை கடத்த முயன்றதாக வட மாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

ஓமலூர்:-

ஓமலூர் அருகே தெருவில் நின்ற 3 வயது குழந்தையை கடத்த முயன்றதாக வட மாநில வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வடமாநில வாலிபர்

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த செல்லப்பிள்ளை குட்டை ஊராட்சி செட்டியப்பனூர் பகுதியை சேர்ந்தவர் பாலமூர்த்தி (வயது 29). இவர் முத்துநாயக்கன்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகில் தச்சு வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் குடிபோதையில் அந்த வழியாக வந்துள்ளார். அப்போது அந்த மா்ம நபர் தெருவில் நின்று கொண்டிருந்த பாலமூர்த்தியின் 3 வயது மகளை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளார்.

தர்ம அடி

இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமூர்த்தி மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் ஓமலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிடிபட்ட சத்தீஷ்கார் மாநில வாலிபரை ஓமலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

கைது

பிடிபட்ட வடமாநில வாலிபர் குழந்தையை கடத்த முயன்றாரா? என்று போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக தொடர்ந்து பதில் கூறவே அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், சத்தீஷ்கார் மாநிலம் பஸ்தர் மாவட்டம், டோக்கனாபால் கிராமத்தை சேர்ந்த ஹர்பந்து (30) என தெரியவந்தது.

மேலும் பொதுமக்கள் தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டு இருந்ததால் போலீஸ் பாதுகாப்புடன் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்த பிறகு அவரிடம் சம்பவம் தொடர்பாக ேபாலீசார் தொடர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் ஓமலூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story