ரெயிலில் அடிபட்டு நர்சு பலி


ரெயிலில் அடிபட்டு நர்சு பலி
x
தினத்தந்தி 12 Oct 2023 10:30 PM GMT (Updated: 12 Oct 2023 10:30 PM GMT)

அம்பாத்துரை அருகே ரெயிலில் அடிபட்டு நர்சு பலியானார்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த ஆலமரத்துப்பட்டி வரதராஜாநகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகள் விழிமலர் (வயது 41). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் காந்திகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்தார். கடந்த சில மாதங்களாக இவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த அவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார்.

ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அம்பாத்துரை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தலையில் பலத்த காயங்களுடன் விழிமலர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விழிமலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விழிமலர் இறந்தது குறித்து தகவலறிந்த அவருடைய பெற்றோர் மருத்துவமனைக்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு நேற்று அதிகாலை இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலில் அடிபட்டு விழிமலர் இறந்தது தெரியவந்தது. மன உளைச்சல் காரணமாக அவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தாரா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story