வேங்கைவயல் விவகாரத்தில் விசாரிக்கப்பட்டவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டம்..?


வேங்கைவயல் விவகாரத்தில் விசாரிக்கப்பட்டவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டம்..?
x

சிபிசிஐடி போலீசார் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே இறையூர் கிராமத்தில் வேங்கைவயலில் பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 26-ந் தேதி அசுத்தம் கலக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. இந்த வழக்கை கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 40 தினங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 90 பேரிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், பலர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இந்த நிலையில், முன்னுக்கு பின் முரணாக பதி அளித்தவர்களிடம் பெற்ற வாக்குமூலங்களை ஆய்வுக்கு உட்படுத்தி சிபிசிசிடி போலீசார் விசாரனை நடத்த திட்டமிட்டுள்ளனர். கடைசி கட்டத்தில் தான் உண்மை கண்டறியும் சோதனை நடத்த இருப்பதாகவும், இதன் மூலம் குற்றவாளிகளை பிடிக்கமுடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உண்மை கண்டறியும் சோதனையை பொறுத்தவரையில், உயர் அதிகாரிகள் மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோரிடம் அனுமதி பெற்றபின், விரைவில் அதற்கேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story