திருத்தணி அருகே மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் சாவு


திருத்தணி அருகே மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் சாவு
x
தினத்தந்தி 2 Jun 2023 9:35 AM GMT (Updated: 2 Jun 2023 9:49 AM GMT)

திருத்தணி அருகே மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் மத்தூர் காலனியை சேர்ந்தவர் பாபு (வயது 52). இவர் கே.ஜி. கண்டிகை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்ற பாபு, நேற்று மதியம் தாடூர் ஊராட்சிக்கு உட்பட்ட எல்.என்.கண்டிகை கிராமத்தில் மின் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக சக ஊழியர்களுடன் சென்றார்.

அங்கு உள்ள ஒரு மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்யும் பணியில் பாபு ஈடுபட்டிருந்தார்.அப்போது அவர் திடீரென கம்பத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.

இதில் மின்வாரிய ஊழியர் பாபுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு இருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பாபுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சென்ற திருத்தணி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த மின்வாரிய ஊழியர் பாபுவுக்கு 2 மனைவி, 2 மகன், 1 மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story