சாமி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலம்


சாமி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 19 Oct 2023 9:00 PM GMT (Updated: 19 Oct 2023 9:00 PM GMT)

கோவையில் சாமி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

கோயம்புத்தூர்
கோவையில் சாமி வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.


தசரா திருவிழா


கோவை சங்கனூரில் இருந்து நல்லாம்பாளையம் செல்லும் வழியில் அன்னியப்பன் வீதியில் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. மிகவும் புகழ் வாய்ந்த இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.


இந்த கோவிலில் தசரா திருவிழா கடந்த 15-ந் தேதி காலை 11.30 மணிக்கு முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடங்கிய பிறகு இந்த கோவிலில் தசரா திருவிழா தொடங்கியது.


தசரா திருவிழா தொடங்கியதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பல்வேறு பூஜைகள், சிறப்பு அலங்காரங்கள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.


வேடம் அணிந்த பக்தர்கள்


தசரா விழாவை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் வேடம் அணிந்தனர். காளி, சுடலை மாடன், கருப்பராயர், ஆஞ்சநேயர், அம்மன், விநாயகர், முருகன், ராஜா, பெண், புலி, கரடி என பல்வேறு வேடங்களை அணிந்தனர். பின்னர் அவர்கள் கோவிலை சுற்றி வலம் வந்து வழிபட்டனர். அதன்பிறகு ஒவ்வொரு குழுவினராக பிரிந்து கோவை நகரின் பல்வேறு இடங்களுக்கு சென்றனர். சில நாட்கள் கோவையில் வேடம் அணிந்து வலம் வரும் பக்தர்கள் தசரா திருவிழாவுக்கு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று நேர்த்திகடன் செலுத்த உள்ளனர்.



Next Story