பிரமாண்டமான விநாயகர் சிலைகள் ஊர்வலம்


பிரமாண்டமான விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

நாகையில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் ஊர்வலம் கடலில் கரைக்கப்பட்டன

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகையில், பிரமாண்டமான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை ஊர்வலம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு கொரோனா ெதாற்று வெகுவாக குறைந்ததால் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இதனையொட்டி நாகை சக்தி விநாயகர் குழு சார்பில் கடந்த 31-ந் தேதி நாகையில் பெரவாச்சேரி, மகாலட்சுமி நகர், சொக்கநாதர் கோவில் தெரு, சாலமன் தோட்டம், வண்டிப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

கடலில் கரைப்பு

இந்தநிலையில் நேற்று பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சரக்கு வாகனங்களில் ஏற்றப்பட்டு மேளதாளம் முழங்க நாகை சவுந்திரராஜபெருமாள் கோவில் முன்பு கொண்டு வரப்பட்டது. அங்கு அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து அனைத்து சிலைகளையும் கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் பப்ளிக் ஆபீஸ் சாலை, புதிய பஸ் நிலையம், ஏழைப்பிள்ளையார் கோவில் வழியாக நாகை புதிய கடற்கரையை சென்றடைந்தது. அங்கு பொக்லின் எந்திரம் உதவியுடன் அனைத்து விநாயகர் சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு

விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் தலைமையில் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story