போக்குவரத்து கழகங்களை தனியார்மயமாக்க துடிப்பதா? தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்


போக்குவரத்து கழகங்களை தனியார்மயமாக்க துடிப்பதா? தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
x

போக்குவரத்து கழகங்களை தனியார்மயமாக்க துடிப்பதா என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சியின் இறுதியில் அதாவது பிப்ரவரி 2021-ல், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை 3,324. தி.மு.க. ஆட்சியில் 30.9.2023 நிலவரப்படி இயக்கப்படும் பஸ்கள் சுமார் 2,600 மட்டுமே. குறைந்த அளவு பஸ்களே இயங்கும்நிலையில் உள்ளதால், பல பஸ் சேவைகளை நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசு நிறுத்தியுள்ளது. மகளிருக்கு கட்டணம் இல்லா பயணம் என்று அறிவிக்கப்பட்டு, குறைந்த அளவு பழைய, பழுதடையக்கூடிய நிலையில் உள்ள பஸ்களையே இயக்குவதால் நகரப்பகுதிகளில் பெண்கள் தங்களது தினசரி வேலைக்குச் செல்லும் நேரத்தை ஒரு மணி நேரம் முன்னதாகவே தொடங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

30.9.2023 அன்றைய தேதி வரை, கருணை அடிப்படையில் பணி கோரி பதிவு செய்துள்ள வாரிசுகளின் எண்ணிக்கை சுமார் 1,087. மேலும், போக்குவரத்து கழகங்களுக்கு டிரைவர் மற்றும் கண்டக்டர் தேர்வுக்கு விளம்பரம் செய்து 18.9.2023 அன்று வரை ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். ஆனாலும் இவர்களில் யாரையும் தேர்ந்தெடுக்காமல் தற்போது தனியார் ஏஜென்சி மூலம் டிரைவர், கண்டக்டர்களை தேர்ந்தெடுக்க முயலும் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இடஒதுக்கீடு உரிமை என்னாவது?

ஏற்கனவே கடந்த ஜூலையில் 538 தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்துவிட்டோம். எனவே தைரியமாக இனி அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கலாம் என்று இரண்டாம் கட்டமாக 30.9.2023 அன்று 117 டிரைவர்களையும், 117 கண்டக்டர்களையும் தனியார் ஏஜென்சி மூலம் நியமிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது தி.மு.க. அரசு.

இதன்படி, போக்குவரத்துத் துறைக்கு தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டால் அரசு போக்குவரத்துத் துறையில் இனி இடஒதுக்கீட்டின் உரிமையை கடைப்பிடிக்க முடியாது. போக்குவரத்து தொழிலாளர் நலன் இனி பேணிக் காக்கப்படாது. போக்குவரத்துத் துறையில் 8 மணி நேர வேலையை கடைப்பிடிக்க முடியாது. தொழிலாளர்களுக்கு பண்டிகை விடுமுறை, வார ஓய்வு கிடைக்காது. இனி தொழிலாளர்களுக்கு பஞ்சப்படியும், வருடாந்திர ஊதிய உயர்வும் கிடைக்காது. அரசு போக்குவரத்துத் துறையில் இனி தொழிலாளர் சட்டம் மற்றும் தொழிலாளர் நலன் என்பதே பெயரளவில் மட்டுமே இருக்கும். தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய பல பலன்கள் கிடைக்காத நிலை ஏற்படும்.

மக்கள் மயங்கமாட்டார்கள்

போராட்டங்களை எல்லாம் இனியும் திராவிடம் என்றும், சனாதனம் என்றும், சமூகநீதி என்றும் பேசி தமிழக மக்களை மடைமாற்றம் செய்துவிடலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினோ, தி.மு.க. அரசோ நினைத்தால் இனி அது தமிழகத்தில் எடுபடாது. ஏனெனில், இன்று தமிழக மக்கள் விழித்துக்கொண்டு விட்டனர். தி.மு.க.வின் பசப்பு வார்த்தைகளில் இனியும் மயங்க மாட்டார்கள்.

எனவே, அரசு போக்குவரத்து கழகங்களை தனியார்மயமாக்கத் துடிக்கும் தி.மு.க. அரசு, உடனடியாக 30.9.2023 அன்று வெளியிட்ட ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்ய வேண்டும். பதிவு செய்துள்ள சுமார் 1,087 வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ள சுமார் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து நேர்மையான முறையில் தமிழகத்தில் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story