குடிநீர், சாலை வசதி செய்துதர கோரி செங்கல்பட்டு மாவட்ட கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்


குடிநீர், சாலை வசதி செய்துதர கோரி செங்கல்பட்டு மாவட்ட கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
x

குடிநீர், சாலை வசதி செய்துதர வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செங்கல்பட்டு

கிராம சபை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் கொத்திமங்கலம் ஊராட்சியில் சுதந்திர தின விழா கிராமசபை கூட்டம் புலிக்குன்றம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கனகம்மாள் தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர், தூய்மை பணிகள், சாலை வசதிகள் ஊராட்சிக்கு தேவையான குடிநீர், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், மழை நீர் சேகரிப்பு மற்றும் வடிகால்வாய் அமைப்பது, ஊராட்சியை தூய்மையாக வைத்து கொள்வது குறித்தும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் குமார், கிராம நிர்வாக அதிகாரி மனோகரன், ஊராட்சி செயலாளர் முருகன், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் எல்லாம்மாள், சுந்தரம்மாள், ஜெகதாம்மாள், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாரணவாசி

காஞ்சீபுரம் அடுத்த வாரணவாசி ஊராட்சி மன்றத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம் தலைமை வகித்து, ஊராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். இதில் முன்னாள் மாவட்ட வருவாய் துறை அதிகாரி மோகன சுந்தரம், தொழில் அதிபர்கள் வினோத் குமார், பிருத்விராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வையாவூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி நீலகண்டன் தலைமை வகித்து வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்.

நெடுங்குன்றம் ஊராட்சி

நெடுங்குன்றம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்ரீ சீனிவாசன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய குழு துணை தலைவர் ஆராமுதன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கஜலட்சுமி சண்முகம், வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி விஜயராஜ், நல்லம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன், வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி ரவி, கீரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வசுந்தரி ராஜேந்திரன், காரணைப்புதுச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் நளினி ஜெகன், ஊனமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன், பெருமாட்டுநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பகவதி நாகராஜன், குமிழி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி கோதண்டபாணி ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தாழம்பூர்

தாழம்பூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தலைவர் முனுசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி பொது நிதியிலிருந்து நான்கு மாதங்களில் மேற்கொண்ட செலவின அறிக்கை, சீரான குடிநீர் வினியோகம், அயோடின் கலந்த உப்பு பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு, தூய்மை பாரதம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமை திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் சிறுசேரி, நாவலூர், முட்டுக்காடு, உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.

குன்னவாக்கம்

குன்னவாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா, துணை தலைவர் அன்னம்மாள் தலைமையிலும், வீராபுரம் ஊராட்சியில் தலைவர் டில்லி, துணை தலைவர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் மோகனா ஜீவானந்தம், அஞ்சூர் ஊராட்சியில் தலைவர் செல்வி தேவராஜ், துணை தலைவர் நித்யானந்தம், திம்மாவரம் ஊராட்சியில் தலைவர் நீலமேகம், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் தலைவர் விஜயலட்சுமி துரைபாபு, துணை தலைவர் கே.பி.ராஜன் ஆகியோர் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

ஆப்பூர் ஊராட்சியில் தலைவர் குமாரசாமி, துணை தலைவர் கேசவன், ஆலப்பாக்கம் ஊராட்சியில் தலைவர் பரிமளா ஜெய்சங்கர், ஒன்றிய கவுன்சிலர் நிந்திமதி திருமலை, ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கவுதமன், துணைத்தலைவர் இந்துகுமார், தென்மேல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், துணை தலைவர் அரிபாபு, புலிப்பாக்கம் ஊராட்சியில் தலைவர் நிர்மலா அசோகன், துணை தலைவர் குமரேசன், ரெட்டிபாளையம் ஊராட்சியில் தலைவர் சந்தியா செந்தில், துணை தலைவர் சந்தானம், மேலமையூர் ஊராட்சியில் ஹெலன் சிந்தியா சரவணன், துணை தலைவர் நீலா, ஆகியோர் தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.

மேல்மருவத்தூர்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வக்கீல் அகத்தியன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக சித்தாமூர் ஒன்றிய குழு தலைவர் ஏழுமலை, ஆதிபராசக்தி பள்ளி குழும தாளாளர் ஸ்ரீதேவி ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் முடிவில் மேல்மருவத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பூச்செடிகள், காய்கனி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி முடிவில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விளையாட்டுபோட்டிகள் நடத்தப்பட்டன. இந்த ஊராட்சி முன்மாதிரி ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் விருது வழங்கப்பட்டதற்கு ஊராட்சி பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

புங்கத்துறை

மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புக்கத்துறை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சொரூபராணி எழிலரசு தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சித்ரா வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தின் போது புக்கத்துறை கிராம மக்கள் பயன்படுத்தக்கூடிய சுடுகாடு பாதை தற்போது வரை சீரமைக்கப்படாமல் இருக்கிறது. இதனை அரசு அதிகாரிகள் உடனடியாக சரி செய்து தர வேண்டும் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் எந்தவித பயன்களையும் இந்த குடியிருப்பு வாசிகள் பெற முடியவில்லை. எனவே அரசு இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சோத்துப்பாக்கம்

சோத்துப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்திற்கு தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அருணகிரி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அமுதா, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் கணேசன், ஊராட்சி செயலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.

கீழ்மருவத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர் அபிராமி, ஊராட்சி செயலாளர் மலர்விழி சகாதேவன், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story