பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கணவர் கைது


பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கணவர் கைது
x
தினத்தந்தி 27 Sep 2023 6:45 PM GMT (Updated: 27 Sep 2023 6:46 PM GMT)

திருவேங்கடம் அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

திருவேங்கடம்:

திருவேங்கடத்தை அடுத்துள்ள அ.கரிசல்குளம் பஞ்சாயத்து ஆலடிபட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 65), விவசாயி. அவருடைய மனைவி சர்க்கரை அம்மாள் (60). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் திருமணம் ஆகி தனித்தனியே குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கிருஷ்ணசாமியும், அவருடைய மனைவியும் தனித்தனியே வசித்தனர். ஏற்கனவே கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவனுடன் கோபித்துக் கொண்டு மகன் வீட்டில் சர்க்கரை அம்மாள் வசித்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணசாமி அரிவாளை எடுத்துக் கொண்டு தனது தோட்டத்துக்கு சென்றார். அங்கு அவருக்கும், சர்க்கரை அம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணசாமி அரிவாளால் சா்க்கரை அம்மாளை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்றபோது கழுத்து மற்றும் கைகளில் வெட்டுக்காயம் பட்டு பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணசாமியை கைது செய்தனர்.


Related Tags :
Next Story