விளைநிலங்களுக்குள் உலா வரும் ஒற்றை யானை


விளைநிலங்களுக்குள் உலா வரும் ஒற்றை யானை
x

ஆயக்குடி அருகே தோட்ட பகுதிகளில் ஒற்றை யானை உலா வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய சட்டப்பாறை, பொன்னிமலைகரடு ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக இங்குள்ள தோட்ட பகுதிகளில், 2 குட்டிகளுடன் 6 காட்டுயானைகள் சுற்றி திரிகின்றன. இவை பயிர்களை சேதப்படுத்துவதோடு, விவசாயிகளை கண்டால் விரட்டுகின்றன. அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சட்டப்பாறை அருகே உள்ள தோட்ட பகுதியில் ஒற்றை யானை உலா வருகிறது. நேற்று ஆயக்குடியை சேர்ந்த அம்மாபட்டி, அன்பழகன் ஆகியோரது தோட்டத்தில் உள்ள மோட்டார் அறை, வாழை மரங்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் தோட்ட பகுதிக்கு செல்ல கடும் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கூட்டமாக திரிந்த யானைகளில் ஒன்று தற்போது தனியாக பிரிந்துள்ளது. இது இரவு மட்டுமின்றி பகலிலும் தோட்டத்தில் உலா வருகிறது. எனவே வனத்துறையினர் விரைவில் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றனர். வனத்துறையினர் கூறும்போது, விவசாயிகள் யானைகளை கண்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். மாறாக செல்போனில் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றனர்.



Next Story