ஓடும் மோட்டார் சைக்கிளில் தலைதூக்கிய சாரை பாம்பு


ஓடும் மோட்டார் சைக்கிளில் தலைதூக்கிய சாரை பாம்பு
x
தினத்தந்தி 17 Oct 2023 7:45 PM GMT (Updated: 17 Oct 2023 7:45 PM GMT)

ஓமலூர் அருகே ஓடும் மோட்டார் சைக்கிளில் தலைதூக்கிய சாரை பாம்பை கண்டு, வண்டியை ஓட்டிச்சென்ற வாலிபர் பயத்தில் எகிறி குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்

ஓமலூர்:-

ஓமலூர் அருகே ஓடும் மோட்டார் சைக்கிளில் தலைதூக்கிய சாரை பாம்பை கண்டு, வண்டியை ஓட்டிச்சென்ற வாலிபர் பயத்தில் எகிறி குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாம்பு என்றால்...

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். எந்த காலத்துக்கும் பொருந்தும் இந்த பழமொழியை நினைவு கூரும் வகையில் சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஓமலூரை அடுத்த பெரியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் ரமேஷ் (வயது 32). பெயிண்டரான இவர் நேற்று வழக்கம்போல் சேலத்திற்கு வேலைக்கு செல்வதற்காக வீட்டில் நிறுத்தி இருந்த தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர் காமலாபுரம் நாலுகால் பாலம், வெள்ளாளப்பட்டி வழியாக சேலம் நோக்கி சென்றார்.

தலைதூக்கிய பாம்பு

வெள்ளாளப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்க் முன்பு திடீரென சாரை பாம்பு ஒன்று தலையை தூக்கியது. பாம்பை கண்டதும் பதறிப்போன அந்த வாலிபர் ஓடும் வண்டியில் இருந்து எகிறி குதித்தார். இதில் வாலிபர் லேசான காயம் அடைந்தார். உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வாலிபருக்கு முதலுதவி செய்தனர்.

தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் மறைந்திருந்த பாம்பை சுமார் அரைமணி நேரமாக தேடினர். பாம்பு மோட்டாா் சைக்கிளில் இருந்து முன் பகுதியில் இருந்து பின்பக்கம் என மாறி மாறி சென்றதால் பாம்பை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

பிடிபட்டது

தொடர்ந்து சீட்டின் பின்பகுதிக்கு சென்றது. அப்போது சீட்டை கழற்றி வைத்துவிட்டு உள்ளே பதுங்கி இருந்த பாம்பை வாலிபர் ஒருவர் கொஞ்சமும் பயமின்றி கையிலேயே லாவகமாக பிடித்தார். பிடித்த பாம்பை அருகில் உள்ள புதர் பகுதியில் கொண்டு சென்று விட்டார். இதன் பின்னரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த வாலிபர் நிம்மதி அடைந்தார்.

சிறிதளவும் பயமின்றி பாம்பை பிடித்த வாலிபரை அனைவரும் பாராட்டினர். இந்த பாம்பானது வீட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தபோது ஏறி உள்ளே பதுங்கி இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஓடும் மோட்டார் சைக்கிளில் திடீரென தலைதூக்கிய சாரை பாம்பை கண்டு வண்டியை ஓட்டிச்சென்ற வாலிபர் பயத்தில் எகிறிகுதித்து காயம் அடைந்த சம்பவம் ஓமலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story