மன்னார்குடி: குளம் தூர்வாரும் போது கிடைத்த குழந்தையுடன் கூடிய பெண்ணின் கற்சிலை


மன்னார்குடி: குளம் தூர்வாரும் போது கிடைத்த குழந்தையுடன் கூடிய பெண்ணின் கற்சிலை
x

மன்னார்குடி அருகே குளத்தில் தூர்வாரும் போது குழந்தையுடன் கூடிய பெண்ணின் கற்சிலை கிடைத்துள்ளது.

மன்னார்குடி:

மன்னார்குடி நகரில் உள்ள ருக்குமணி குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை குளத்தின் வட பகுதியில் மண்ணை தோண்டி எடுக்கும் பொழுது கற்சிலை ஒன்று தென்பட்டது.

அதனை பாதுகாப்பாக தொழிலாளர்கள் வெளியே எடுத்தனர். அம்மன் சிலை போன்று தோற்றமளித்த இந்த சிலையானது ஒரு பெண் தனது இடுப்பில் குழந்தையை தூக்கி வைத்திருப்பது போன்று இருந்தது.

இது குறித்து மன்னார்குடி தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி தாசில்தார் ஜீவானந்தம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சிலையை கைப்பற்றி பாதுகாப்பாக மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் எடுத்துச் சென்றனர்.

முந்தைய காலத்தில் தனது உயிரை கொடுத்து குழந்தையை காப்பாற்றும் பெண்களின் நினைவாக இது போன்ற சிலைகள் வைக்கப்படுவது வழக்கம் எனவும் இந்த சிலையும் அது போன்ற ஒரு சிலையாக இருக்கும் எனவும் அப்பகுதியில் உள்ள வயதில் பெரியோர்கள் தெரிவித்தனர்.


Next Story