மணல் ஏற்றி சென்ற லாரி மோதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலி; 2 பேருக்கு தீவிர சிகிச்சை


மணல் ஏற்றி சென்ற லாரி மோதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலி; 2 பேருக்கு தீவிர சிகிச்சை
x

மணல் ஏற்றி சென்ற லாரி மோதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலியானார். விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அடுத்துள்ள வெத்தியார்வெட்டு காலனி தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் வீரராகவன் (வயது 18). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 4-ந்தேதி வீரராகவன் ஜெயங்கொண்டத்தில் இருந்து வீட்டிற்கு தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நெல்லிதோப்பு கிராமத்தின் மேம்பாலம் வழியாக சென்றபோது மணல் ஏற்றி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் வீரராகவன் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 3 பேரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 3 பேரும் தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வீரராகவன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story