வேலை கொடுக்காத ஆத்திரத்தில் பெட்ரோல் பங்க் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர்


பரமக்குடியில் பெட்ரோல் பங்க் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

பரமக்குடி

பரமக்குடியில் பெட்ரோல் பங்க் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது செய்யப்பட்டார்.

பெட்ரோல் குண்டு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஸ் நிலையம் அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. இதில் நேற்று முன்தினம் இரவு லுங்கி, சட்டை அணிந்து வந்த நபர் திடீரென கையில் இருந்த பெட்ரோல் குண்டை பெட்ரோல் பங்க் மீது வீசினார். அது வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் பதறியடித்து ஓடி வந்து தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.

இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பரமக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்பு பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சிகளை போலீசார் எடுத்து அந்த மர்ம நபரை தேடி வந்தனர்.

கைது

இந்தநிலையில் அவர் பரமக்குடி அரசு ஐ.டி.ஐ. எதிரில் வசித்து வரும் கணேசன் (வயது 35) என்பது தெரியவந்தது. போலீசார் அந்த வாலிபரை கைது செய்து பரமக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின்னர், அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கணேசன் பலமுறை அந்த பெட்ரோல் பங்க் சென்று வேலை கேட்டுள்ளதாகவும், அவர்கள் வேலை கொடுக்காததால் ஆத்திரத்தில் அவர்களை பயமுறுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு பெட்ரோல் குண்டு வீசியதாகவும் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story