பெரியபாளையத்தில் மனைவியிடம் தகராறு செய்தவரை தட்டிக் கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து


பெரியபாளையத்தில் மனைவியிடம் தகராறு செய்தவரை தட்டிக் கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து
x

பெரியபாளையத்தில் மனைவியிடம் தகராறு செய்தவரை தட்டிக் கேட்ட கணவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஊராட்சி நேதாஜி நகரில் வசித்து வருபவர் சந்தோஷ்குமார் (வயது 33). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த சின்னமணி என்ற சிட்டி (28) சந்தோஷ்குமாரின் மனைவியை பார்த்து கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதை தட்டி கேட்ட அவரை சின்னமணி தகாத வார்த்தையால் திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ்குமார் சின்னமணியை தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஆக மாறியது.

அப்போது சின்னமணி என்ற சிட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷ் குமாரை குத்தினார். இதனை தடுக்க முயன்ற சந்தோஷ் குமாரின் நண்பர் மகேஷ் குமார் (35) என்பவருக்கும் கத்தி வெட்டு விழுந்தது.

இதனால் ரத்த வெள்ளத்தில் இருவரும் அலறி துடித்து மயங்கி விழுந்தனர். சின்னமணி என்ற சிட்டி அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இந்த சம்பவம் குறித்து சந்தோஷ்குமார் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சின்னமணி என்ற சிட்டியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story