குடிக்க பணம் தர மறுத்ததால் தொழிலாளியை பீர்பாட்டிலால் குத்திக்கொன்ற வாலிபர் கைது


குடிக்க பணம் தர மறுத்ததால் தொழிலாளியை பீர்பாட்டிலால் குத்திக்கொன்ற வாலிபர் கைது
x

குடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்து தொழிலாளியை பீர்பாட்டிலால் குத்திக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை

மதுகுடிக்க பணம்

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகர் (வயது 45). இவர் பழைய பொருட்களான இரும்பு, பேப்பர் வாங்கும் கடையில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (28). இவர் பழைய பாட்டில்கள், இரும்பு, பிளாஸ்டிக் ஆகிய பொருட்களை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில், பழைய பொருட்களை வாங்கும்போது மனோகரனுடன் கண்ணனுக்கு பழக்கம் இருந்து வந்துள்ளது. இதையடுத்து மனோகரன் நேற்று கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் பேக்கரி கடை அருகே நடந்து சென்ற போது, சாலையோரம் படுத்து இருந்த கண்ணன், மனோகரனை வழிமறித்து மதுகுடிக்க பணம் கேட்டதாக தெரிகிறது. ஏற்கனவே பழைய பாட்டில்கள் விற்றதற்கு கண்ணன் காசு கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில், மீண்டும் குடிக்க பணம் கேட்டதால் மனோகர் பணம் தர மறுத்து விட்டார்.

பீர்பாட்டிலால் குத்து

இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் தான் வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து மனோகர் வயிற்றில் குத்தி விட்டுஅங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மனோகரனை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மனோகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து அறிந்த பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்வின்ராஜ் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றார்.


Next Story