கூடலூர் அருகே விளைநிலத்தில் விழுந்த மரத்தால் விவசாய பணிகள் பாதிப்பு-உரிய நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு கோரிக்கை

கூடலூர் அருகே கடந்த ஆண்டு பெய்த மழையில் சரிந்து விழுந்த மரத்தின் அடிப்பாகத்தை அகற்றாததால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கூடலூர்
கூடலூர் அருகே கடந்த ஆண்டு பெய்த மழையில் சரிந்து விழுந்த மரத்தின் அடிப்பாகத்தை அகற்றாததால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
விவசாய நிலத்தில் விழுந்த மரம்
கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் தொடங்கி பல மாதங்கள் மழை பெய்து வருகிறது. இ்ந்த காலகட்டத்தில் மரம் மற்றும் மண் சரிவுகள் அதிக அளவு ஏற்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தொடர் கன மழை பெய்து வந்தது. இதனால் பாதிப்புகள் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு கூடலூர் அருகே குனில் வயல் பகுதியில் விவசாய நிலத்தில் கரையோரம் நின்றிருந்த பழமையான ராட்சத ஈட்டி மரம் ஒன்று கன மழையால் சரிந்து விழுந்தது. இதை தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அறுத்து எடுத்து சென்றனர். தொடர்ந்து அரசின் குடோனுக்கு ஈட்டி மரம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதன் அடிப்பாகம் விவசாய நிலத்தில் அப்படியே விட்டுச் சென்றனர்.
விவசாய பணி பாதிப்பு
இந்த நிலையில் ஒரு ஆண்டுக்கு மேலாகியும் ஈட்டி மரத்தின் அடிப்பாகம் விவசாய நிலத்தில் கிடக்கிறது. இது குறித்து வனத்துறையிடம் அந்த பகுதி விவசாயிகள் பலமுறை முறையிட்டனர். ஆனால் இதுவரை அகற்றவில்லை. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் நெல் நடவு பணியை தொடங்க விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் நிலத்தை உழுது விதை நெல் தூவி நாற்றுகள் வளர்க்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் விவசாய நிலத்தில் ஈட்டி மரத்தின் அடிப்பாகம் கிடப்பதால் உழவு பணியை தொடங்க முடியாமல் விவசாயி நாராயணன் என்பவர் அவதிப்பட்டு வருகிறார். இது குறித்து விவசாயி கூறும் போது, ஈட்டி மரம் என்பதால் வனத்துறையினர் தான் அந்த மரத்தை அகற்ற வேண்டும். மேலும் ராட்சத மரத்தின் அடிப்பாகம் என்பதால் அகற்ற முடியவில்லை. இது தொடர்பாக வனத்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே விரைவாக அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






