கழுத்து அறுபட்ட நிலையில் கழிவறையில் கிடந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர்


கழுத்து அறுபட்ட நிலையில் கழிவறையில் கிடந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர்
x
தினத்தந்தி 26 July 2023 6:45 PM GMT (Updated: 27 July 2023 5:31 AM GMT)

கழுத்து அறுபட்ட நிலையில் கழிவறையில் கிடந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர்

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில், கழிவறையில் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலைக்கு முயன்றாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கழுத்து அறுபட்ட நிலையில்...

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதி அருகில் உள்ள ஒரு கழிவறையில் அடையாளம் தெரியாத ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரத்தத்தால் பேரனின் பெயர்

இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது அந்த கழிவறையில் ரத்தத்தால் ஒரு செல்போன் நம்பர் எழுதப்பட்டு இருந்தது.

அந்த நம்பரில் போலீசார் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்தவர் கோவை குனியமுத்தூர் பிரின்ஸ் கார்டன் பகுதியை சேர்ந்த முகைதீன்(வயது 56) என்பதும், அவர் வெல்டிங் பட்டறை வைத்துள்ளதும் தெரிய வந்தது.

மேலும் அவர் கழிவறை சுவரில் ரத்தத்தால் 'ஐ லவ் யூ குலு' என தனது பேரனின் பெயரை எழுதி வைத்து இருந்தார்.

தற்கொலைக்கு முயன்றாரா?

இது குறித்து வேளாங்கண்ணி போலீசார், முகைதீன் தற்கொலை செய்து கொள்வதற்காக தனது கழுத்தை அறுத்துக்கொண்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story