தோட்டங்களில் புகுந்து காட்டு யானை அட்டகாசம்


தோட்டங்களில் புகுந்து காட்டு யானை அட்டகாசம்
x

கடம்பூர் மலைக்கிராமத்தில் தோட்டங்களில் புகுந்த காட்டு யானை சோளப்பயிர், கரும்புகளை நாசம் செய்தது.

ஈரோடு

டி.என்.பாளையம்

கடம்பூர் மலைக்கிராமத்தில் தோட்டங்களில் புகுந்த காட்டு யானை சோளப்பயிர், கரும்புகளை நாசம் செய்தது.

பயிர்கள் சேதம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானை, சிறுத்தைப்புலி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதில் காட்டுயானைகள் அவ்வப்போது உணவு தேடி காட்டில் இருந்து வெளியேறி அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

கடந்த 6 மாதங்களாக சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலை கிராமத்தில் செங்காடு, ஏரியூர், பூதிக்காடு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் காட்டு யானை ஒன்று புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

காட்டு யானை அட்டகாசம்

இந்த நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறியது. பின்னர் அந்த யானை பூதிக்காடு, செங்காடு பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த சோளத்தையும், கரும்புகளையும் தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது. இதை பார்த்த தோட்டத்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து கடம்பூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று வாகனங்களில் சைரன் ஒலி எழுப்பி யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு காட்டு யானை அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

கிராம மக்கள் கோரிக்கை

இதுகுறித்து பூதிக்காடு, செங்காடு பகுதி கிராமமக்கள் கூறும்போது, 'விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிரை நாசம் செய்யும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்' என்றனர்.

மேலும் வனத்துறையினர் கூறும்போது, 'மலைகிராம பகுதியில் வாழை, கரும்பு போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இவற்றை தின்று ருசி கண்ட காட்டு யானை அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி தோட்டங்களுக்குள் புகுந்து வருகிறது. இந்த யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அதை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் விரைவில் இந்த காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


Next Story