சிங்கப்பெருமாள் கோவில் அருகே இரும்பு கம்பி தலையில் விழுந்து தொழிலாளி சாவு


சிங்கப்பெருமாள் கோவில் அருகே இரும்பு கம்பி தலையில் விழுந்து தொழிலாளி சாவு
x

சிங்கப்பெருமாள் கோவில் அருகே இரும்பு கம்பி தலையில் விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள பாரேரி ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 48). இவர் மறைமலை நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 மாதமாக தொழிற்சாலை மூடப்பட்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது.

இதையடுத்து வேலைக்கு வந்த செல்வம் தொழிற்சாலையில் சுத்தம் செய்யும் பணியில் சக ஊழியர்களுடன் சேர்ந்து ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென அவரது தலையில் இரும்பு கம்பி விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்த செல்வத்தை சக ஊழியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிற்சாலை அதிகாரிகளிடம் விசாரித்து வருகின்றனர்.


Next Story