திருக்கோவிலூர் அருகே முன்னாள் ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் தொழிலாளி கைது


திருக்கோவிலூர் அருகே முன்னாள் ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 19 May 2023 6:45 PM GMT (Updated: 19 May 2023 6:45 PM GMT)

திருக்கோவிலூர் அருகே முன்னாள் ராணுவ வீரரை மிரட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆர்.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சகாய பன்னீர்செல்வம் (வயது 44). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை டி.அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளியான பிரகாசம் (50) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த சகாய பன்னீர்செல்வத்திற்கு அரசு வேலைவாங்கித்தருவதாகவும், அதற்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் தருமாறும் பிரகாசம் கூறியதாக தெரிகிறது. இதை நம்பிய சகாய பன்னீர்செல்வம் பிரகாசத்திடம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை கொடுத்துள்ளார். ஆனால் சகாய பன்னீர்செல்வத்துக்கு பிரகாசம் வேலை வாங்கிக்கொடுக்காமலும், அவர் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்காமலும் இருந்துள்ளார். இந்த நிலையில் சகாய பன்னீர்செல்வம் பிரகாசத்தின் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரகாசம் சகாய பன்னீர்செல்வத்தை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து பிரகாசத்தை கைது செய்தனர்.


Next Story