பெண்ணாடம் அருகே காதல் திருமணம் செய்த 19-வது நாளில் இளம்பெண் தற்கொலை


பெண்ணாடம் அருகே காதல் திருமணம் செய்த 19-வது நாளில் இளம்பெண் தற்கொலை
x

பெண்ணாடம் அருகே காதல் திருமணம் செய்த 19-வது நாளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே உள்ள நந்தபாடி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகள் ஷர்மிளா(வயது 23). இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் தையல் பயிற்சி படித்தார். இதற்காக தினமும் அவர், தனியார் பஸ்சில் விருத்தாசலத்துக்கு சென்று வந்தார்.

அவ்வாறு சென்றபோது ஷர்மிளாவுக்கும், அந்த பஸ் டிரைவரான விருத்தாசலம் அடுத்த தொட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் சத்யராஜ்(28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 11-ந் தேதி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

ஏமாந்து விட்டதால் கதறல்

இதனிடையே தனது மகளை காணவில்லை என்று ஷர்மிளாவின் தாய் சாந்தி பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது பற்றி அறிந்ததும் காதல் ஜோடி, விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். பின்னர் 2 பேரது உறவினர்களையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சத்யராஜூக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவரை நம்பி ஏமாந்து விட்டதாகவும் கூறி ஷர்மிளா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து தாயிடம் கூறி கதறி அழுதார். மேலும் அவர், மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

தற்கொலை

நேற்று முன்தினம் மாலை ஷர்மிளா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தி, பெண்ணாடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து ஷர்மிளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த 19-வது நாளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story