காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை


காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
x

நெல்லை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரும் நெல்லை டக்கரம்மாள்புரம் அருகே உள்ள ஜோதிபுரத்தை சேர்ந்த சுபாஷினி (வயது 23) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

சுபாஷினி குடும்பத்துடன் பாலக்காட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து சுபாஷினி தனது கணவரை பிரிந்து குழந்தையுடன் ஜோதிபுரம் மேற்கு தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.

நேற்று முன்தினம் இரவில் சுபாஷினி சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு வழக்கத்தைவிட சீக்கிரமாகவே சென்றுவிட்டார். நேற்று காலை வெகுநேரம் ஆகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டியும் திறக்கவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர்.

அப்போது சுபாஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சுபாஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், தற்கொலை செய்து கொண்ட சுபாஷினியின் கையில் அறுக்கப்பட்ட தடங்கள் இருந்தது. அவரது செல்போனை ஆய்வு செய்த போது தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது கையை அறுத்துக் கொண்டு அதனை புகைப்படமாக எடுத்து உறவினர்கள் சிலருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி உள்ளது தெரியவந்தது.

சுபாஷினிக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் அவர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகரும் விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story