தண்டவாளத்தில் தலை வைத்து வடமாநில வாலிபர் தற்கொலை


தண்டவாளத்தில் தலை வைத்து வடமாநில வாலிபர் தற்கொலை
x

சேலம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

சேலம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

வாலிபர் தலை துண்டித்து...

சேலம் ரெயில் நிலையத்தில் 5-வது நடைமேடையில்(பிளாட்பார்ம்) சம்பவத்தன்று அதிகாலையில் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12672) வந்தது. அந்த ரெயில் 5 நிமிடம் நின்றுவிட்டு அங்கிருந்து சென்னை நோக்கி புறப்பட்டது.

அப்போது நடைமேடையின் கடைசி பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென ரெயில் புறப்படுவதை பார்த்து, அந்த ரெயில் வரும் தண்டவாள பகுதியில் இறங்கி படுத்துக்கொண்டார். இதை சற்றும் ரெயில் என்ஜின் டிரைவர் கவனிக்க இயலாத நிலையில், ரெயில் தண்டவாளத்தில் படுத்திருந்த அந்த வாலிபர் மீது ரெயில் ஏறிச்சென்றது.

இதில் தலை துண்டித்து சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் துடிதுடித்து இறந்தார். இதனால் அதிகாலை நேரத்தில் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தகவல் அறிந்து அங்கு வந்த ரெயில்வே போலீசார், தலை துண்டித்து இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்

மேலும் இறந்தவரின் டி-சர்ட் பாக்கெட்டில் இருந்த இந்தியில் எழுதப்பட்டு இருந்த துண்டுசீட்டின் மூலம் இறந்தவர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி என்பதும், கேரளாவிற்கு வேலைக்கு சென்றவர் சேலத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

மேற்கு வங்காளத்தில் உள்ள அந்த வாலிபரின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வந்த பின்பு தான் அந்த வாலிபர் குறித்த முழுவிவரமும், அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பதும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story