படிக்கட்டில் அமர்ந்து பயணம் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில வாலிபர் பலி


படிக்கட்டில் அமர்ந்து பயணம் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில வாலிபர் பலி
x

திருத்தணி பொன்பாடி ரெயில் நிலையம் அருகே படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில வாலிபர் பரிதாபமாக பலியானார்.

திருவள்ளூர்

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொன்பாடி ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அடிபட்டு இறந்து கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே போலீசார் உடலை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விபத்தில் இறந்த நபர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மரோட்டி துன்யா அட்லா (வயது 33) என தெரியவந்தது.

இவர் நேற்று முன்தினம் காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து சொந்த ஊர் செல்வதற்காக பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனது நண்பர்களுடன் பயணம் செய்துள்ளார். திருத்தணி அடுத்த பொன்பாடி ரெயில் நிலையம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது, ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்து வந்த மரோட்டி துன்யா அட்லா எதிர்பாராதவிதமாக திடீரென ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில், தலை, கால், கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story