மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
x
கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

இரணியல் அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் ெதரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-

வாகனம் மோதியது

கல்லுக்கூட்டம் அருகே உள்ள சேரியாவட்டம் பகுதியை சேர்ந்தவர் ரொனால்டு ஸ்டீபன். இவரது மகன் ஆஸ்வின் ஸ்டெபின் (வயது25). இவர் கூட்டுறவு தொழில் பயிற்சி படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நாகர்கோவிலுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

இரணியல் அருகே உள்ள பரசேரி பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும், அந்த வாகனம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கீழகருப்புக்கோடு பகுதியை சேர்ந்த தாணுதாஸ் என்பவர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது.

பரிதாப சாவு

இதில் ஆஸ்வின் ஸ்டெபின், தாணுதாஸ் ஆகிய இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆஸ்வின் ஸ்டெபின் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். படுகாயமடைந்த தாணுதாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டு பிடிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

1 More update

Next Story