சிறுபான்மையின வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்


சிறுபான்மையின வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
x

சிறுபான்மையின வெறுப்பு அரசியலை கைவிட வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவற்றின் மூலம் சோதனை என்னும் பெயரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. ஆகிய இஸ்லாமிய அமைப்புகளின் பொறுப்பாளர்களுடைய இல்லங்கள், அலுவலகங்களில் நுழைந்து அவர்களைத் துன்புறுத்தியும், அச்சுறுத்தியும் பா.ஜ.க. அரசு ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. இத்தகைய இஸ்லாமிய விரோதப் போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வியக்கங்கள் இஸ்லாமியர்கள் நலன்கள் மட்டுமின்றி அனைத்துத்தரப்பு மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுகிற அமைப்புகளே ஆகும். ஆனால், தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து இவ்விரு இயக்கங்களையும் குறிவைத்து, பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளதாக முத்திரை குத்தி வெகுமக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அண்மையில் நடந்த பரிசோதனைகளில் நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்துள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளுக்கும் எதிரானவையாகும். எனவே. இவ்வாறான சிறுபான்மையின வெறுப்பு அரசியலைச் சனாதன சங்பரிவார் அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story