பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமடைந்த சிறுமிக்கு கருக்கலைப்பு


பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமடைந்த சிறுமிக்கு கருக்கலைப்பு
x

பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமடைந்த சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருச்சி

லால்குடி:

பாலியல் பலாத்காரம்

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த தாய், தந்தையை இழந்த 16 வயது சிறுமி ஒருவர், தற்போது தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் போலீஸ்காரர் மற்றும் அவர் தம்பி உள்பட 5 பேர் கொண்ட கும்பல், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த சிறுமி கர்ப்பமானார்.

இது பற்றி தகவல் அறிந்த போலீஸ்காரர் உள்ளிட்ட 5 பேரும், அந்த சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க ஒரு நர்சிடம் பேசி பணம் கொடுத்துள்ளனர். இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்த சிறுமிக்கு கருவை கலைக்க நர்ஸ் ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி அங்கு கருக்கலைப்பு செய்த நிலையில், அந்த சிறுமியின் உடல்நிலை மோசமாகியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி

இதையடுத்து அந்த சிறுமியை மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள், லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவத்தில் போலீஸ்காரரும் ஈடுபட்டு இருப்பதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தாமதம் செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story