காசநோய் தின உறுதிமொழி ஏற்பு
காசநோய் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட காசநோய் மையத்தின் சார்பில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் உலக காசநோய் தின நிகழ்ச்சி ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் மருத்துவ இணை இயக்குனர் சகாய ஸ்டீபன்ராஜ் தலைமையில் நடந்தது. சுகாதார துணை இயக்குனர்கள் அஜித்குமார், ரவிச்சந்திரன், சிவானந்தவள்ளி, செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன், மருத்துவ அலுவலர் வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காசநோய் மருத்துவப்பணி துணை இயக்குனர் ஜீவானந்தம் வரவேற்றார். நிகழ்ச்சியில் காசநோய் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு வினா,விடை போட்டி நடத்தப்பட்டது. காசநோயை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து டாக்டர்கள் விளக்கினர். 2 வாரத்திற்கு மேல் சளி, இருமல் உள்ளவர்களை கண்டறிந்து காசநோய் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. காசநோய் கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை காலத்தில் மத்திய அரசின் சார்பில் மாதம் ரூ.500 மற்றும் மாநில அரசின் சார்பில் ரூ.1000 உதவி தொகை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இணை இயக்குனர் பரிசு வழங்கினார். காசநோயை முழுமையாக ஒழிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் கணபதி செய்திருந்தார். மருத்துவ அலுவலர் ரபீகா கிசாரே நன்றி கூறினார்.