இண்டூர் அருகேமோட்டார் சைக்கிள் மீது கார் மோதி டிரைவர் உள்பட 2 பேர் பலிசிறுவன் படுகாயம்


தினத்தந்தி 20 July 2023 7:00 PM GMT (Updated: 20 July 2023 7:01 PM GMT)
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி லாரி டிரைவர் உள்பட 2 ேபர் பலியானார்கள். 17 வயது சிறுவன் படுகாயம் அடைந்தான்.

லாரி டிரைவர்

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள ராஜாகொல்ல அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ். இவருடைய மகன் அஜித் (வயது 19). கூலித்தொழிலாளி. அதே ஊரை சேர்ந்த சின்ன பையன் மகன் சிலம்பரசன் (30). லாரி டிரைவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிலம்பரசனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சிலம்பரசன், அஜித் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தர்மபுரியில் இருந்து ராஜாகொல்ல அள்ளிக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை 17 வயது சிறுவன் ஓட்டினான். அஜித், சிலம்பரசன் ஆகியோர் பின்னால் அமர்ந்திருந்தனர்.

அப்போது இண்டூர் அருகே அதகப்பாடி பகுதியில் சென்றபோது பென்னாகரத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிலம்பரசன் மற்றும் 17 வயது சிறுவன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சோகம்

எனினும் சிகிச்சை பலனின்றி சிலம்பரசன் இறந்தார். 17 வயது சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற இண்டூர் போலீசார் பலியான அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் ராஜா கொல்லஅள்ளி கிராமத்தில் சோகத்ைத ஏற்படுத்தி உள்ளது.


Next Story