மோகனூர் அருகேவிபத்தில் இளம்பெண் பலி


மோகனூர் அருகேவிபத்தில் இளம்பெண் பலி
x
தினத்தந்தி 28 July 2023 7:00 PM GMT (Updated: 28 July 2023 7:00 PM GMT)
நாமக்கல்

மோகனூர்:

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் வாளசிராமணி மேலத்தெருவை சேர்ந்தவர் திவாகர் (வயது 24). எலக்ட்ரீசியன். இவருக்கும், கரூர் பகுதியை சேர்ந்த பிருந்தா (24) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திவாகர் தனது மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, மோகனூர் வழியாக கரூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோகனூர் அருகே ஆண்டாபுரம் பிரிவு ரோடு அருகே வந்தபோது குமரிபாளையம் ஊராட்சி மாமரத்துப்பட்டி காலனியை சேர்ந்த பெருமாள் (60) என்பவர் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அந்தசமயம் திவாகர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது.

இதில் 3 பேரும் கீழே விழுந்ததில் பிருந்தாவிற்கு தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. திவாகர், பெருமாள் லேசான காயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து பிருந்தா மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிருந்தா இறந்தார். இதுகுறித்து மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story