கியாஸ் சிலிண்டர் லாரி- வேன் மோதியதில் 2 வாலிபர்கள் பலி


கியாஸ் சிலிண்டர் லாரி- வேன் மோதியதில் 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 4 July 2023 4:44 PM GMT (Updated: 5 July 2023 7:52 AM GMT)

பொங்கலூர் அருகே கியாஸ் சிலிண்டர் லாரி -சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.

திருப்பூர்

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சரக்கு வேன்

தூத்துக்குடியில் இருந்து சரக்கு வேன் ஒன்று கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த வேனில் திருச்செந்தூரை சேர்ந்த சின்னத்துரை என்பவரது மகன் சொர்ணவேல் (வயது 30), அதே ஊரை சேர்ந்த ஏசுதாஸ் என்பவரது மகன் ரமேஷ் கோபி (25) ஆகியோர் இருந்தனர். இவர்களது சரக்கு வேன் திருப்பூர் அருகே பொங்கலூரை அடுத்த வேலாயுதம்பாளையம் பிரிவில் நேற்று காலை 6 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே கோவையில் இருந்து கரூருக்கு சமையல் கியாஸ் சிலிண்டரை ஏற்றிக்ெகாண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் சரக்கு வேனும், லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. லாரியின் முன் பக்கமும் சேதமானது.

2 பேர் பலி

இந்த விபத்தில் சரக்கு வேனில் வந்த சொர்ணவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ரமேஷ்கோபியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் கோபியும் பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story