ஓசூரில் மினி பஸ் நடுரோட்டில் கவிழ்ந்தது; 3 வயது குழந்தை உள்பட 16 பேர் படுகாயம்-வேலை வாய்ப்பு முகாமிற்கு சென்று திரும்பிய போது விபத்து


ஓசூரில் மினி பஸ் நடுரோட்டில் கவிழ்ந்தது; 3 வயது குழந்தை உள்பட 16 பேர் படுகாயம்-வேலை வாய்ப்பு முகாமிற்கு சென்று திரும்பிய போது விபத்து
x

ஓசூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு சென்றவர்கள் மினி பஸ்சில் ஊருக்கு திரும்பிய போது அந்த பஸ் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 வயது குழந்தை உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு சென்றவர்கள் மினி பஸ்சில் ஊருக்கு திரும்பிய போது அந்த பஸ் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 வயது குழந்தை உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேலைவாய்ப்பு முகாம்

ஓசூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று அரசுத்துறை சார்பில் தனியார் பங்களிப்புடன் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், வேலையில்லா பட்டதாரிகள், பெண்கள், ஆண்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு சிறப்பு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பஸ்கள் மற்றும் வேன்கள் மூலம் வேலை வாய்ப்பு முகாமிற்கு ஏராளமானோர் ஓசூருக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் முகாம் முடிந்ததும் அதே வாகனத்தில் திருப்பி அழைத்துசெல்லப்பட்டனர்.

மினிபஸ் கவிழ்ந்து விபத்து

அந்த வகையில் ஊத்தங்கரை அருகே உள்ள சாம்பல்பட்டி, குமாரபட்டி, நாடலப்பள்ளி, பசலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை வாய்ப்பு முகாமிற்கு வந்து இருந்தனர். முகாம் முடிந்ததும் அனைவரும் மினி பஸ்சில் ஊருக்கு திரும்பினர். அப்போது ஓசூர் ரிங் ரோட்டில் சீதாராம் நகர் பகுதியில் மினி பஸ் வேகமாக சென்றபோது, சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 3 வயது குழந்தை பிரித்கா, அவரது தாயார் நதியா மற்றும் புனிதா, ராஜேஸ்வரி, தனலட்சுமி, மாரியம்மாள் உள்பட 15 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுடன் மினி பஸ்சில் பயணம் செய்த ஒரு வாலிபரும் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அனைவரும் மீட்கப்பட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எம்.எல்.ஏ. ஆறுதல்

இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் அவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்குமாறு டாக்டர்களுக்குஅறிவுறுத்தினர்.

அப்போது, தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.


Next Story