தொப்பூர் கணவாயில் மின்கம்பி பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து


தினத்தந்தி 22 Oct 2022 6:45 PM GMT (Updated: 22 Oct 2022 6:45 PM GMT)

தொப்பூர் கணவாயில் மின்கம்பி பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

மின் கம்பி பார லாரி

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து ராசிபுரத்திற்கு மின் கம்பி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் நிர்மல்குமார் (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக ரமேஷ் (33) உடன் வந்தார்.

இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று காலை வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் நிர்மல்குமாருக்கு கால் முறிந்தது. ரமேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் சுங்க சாவடி ரோந்து படையினர் ஒன்றிணைந்து இரு டிரைவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story