பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் சாவு


பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் சாவு
x
தினத்தந்தி 10 Nov 2022 6:45 PM GMT (Updated: 10 Nov 2022 6:45 PM GMT)

பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்தார்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மருதிபட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் ஆகாஷ் (வயது 19). மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று ஆகாஷ் மருதிபட்டியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்றார். அதே நேரம் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. மு.கோவில்பட்டி அருகே சென்ற போது சாலையின் குறுக்கே திடீரென கன்றுக்குட்டி வந்தது. எதிர்பாராதவிதமாக கன்றுக்குட்டி மீது மோதிய ஆகாஷ் அவ்வழியாக வந்த தனியார் பஸ்சின் சக்கரத்தில் சிக்கினார். இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து எஸ்.வி.மங்களம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்-சிங்கம்புணரி வழியாக திண்டுக்கல் செல்லும் நெடுஞ்சாலை பகுதியில் மாடுகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சாலையில் சுற்றும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story