நாமக்கல் அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்; 12 பேர் காயம்
சேலத்தில் இருந்து திருச்சிக்கு நேற்று மாலை பயணிகளை ஏற்றி கொண்டு திருச்சி கோட்ட அரசு பஸ் ஒன்று சென்றது. இந்த பஸ்சில் 24 பயணிகள் இருந்தனர். பஸ்சை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுந்தரராஜன் (வயது 46) என்பவர் ஓட்டினார். கரூரை சேர்ந்த சரவணகுமார் (40) கண்டக்டராக இருந்தார்.
இந்த பஸ் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதன்சந்தையில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது திடீரென முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் சுந்தரராஜன், கண்டக்டர் சரவணகுமார் உள்பட 7 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் 12 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டதால் வாகனங்களை மாற்றுப்பாதையில் போலீசார் திருப்பி விட்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து லாரியில் மோதியதாக கூறப்படுகிறது. இருப்பினும் விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.