கொல்லிமலையில்கார்- மோட்டார் சைக்கிள் மோதல்; பிளஸ்-2 மாணவர் பலிநண்பர் படுகாயம்


கொல்லிமலையில்கார்- மோட்டார் சைக்கிள் மோதல்; பிளஸ்-2 மாணவர் பலிநண்பர் படுகாயம்
x
நாமக்கல்

சேந்தமங்கலம்:

கொல்லிமலையில் கார்- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

நண்பர்கள்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள தின்னனூர் நாடு ஊராட்சி சோளக்கன்னி பட்டியை சேர்ந்தவர் ரஜினி. இவருடைய மகன் அகிலன் (வயது 17). வாழவந்தி நாடு பெருமப்பட்டியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருடைய மகன் வசந்த் (17). நண்பர்களான இவர்கள் 2 பேரும் செம்மேட்டில் உள்ள ஜி.டி.ஆர். அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர்.

இந்த நிலையில் நண்பர்கள் 2 பேரும் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் சோளக்காட்டில் இருந்து செம்மேடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள தனியார் லாட்ஜ் அருகே வந்தபோது, எதிரே வந்த காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி கொண்டன.

விசாரணை

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அகிலன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். வசந்த் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் வசந்தை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வாழவந்திநாடு போலீசார் அகிலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டி வந்த கொல்லிமலை தண்ணிமாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாசகுமார் (48) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story