பரமத்திவேலூர் அருகேதென்னை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலிகோவில் தர்மகர்த்தா படுகாயம்


பரமத்திவேலூர் அருகேதென்னை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலிகோவில் தர்மகர்த்தா படுகாயம்
x
தினத்தந்தி 22 May 2023 7:00 PM GMT (Updated: 22 May 2023 7:01 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே தென்னை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார். கோவில் தர்மகர்த்தா படுகாயம் அடைந்தார்.

விவசாயி

பரமத்திவேலூர் தாலுகா நடந்தை அருகே உள்ள குளத்துபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 44). விவசாயி. நடந்தை அருகே உள்ள பெரிய சூராம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தன் (88). இவர் அங்குள்ள பெருமாள் கோவில் தர்மகர்த்தாவாக உள்ளார். இந்த நிலையில் பெரியசூரம்பாளையத்தில் உள்ள பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற இருந்தது.

இதற்காக தர்மகர்த்தா கந்தன் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு சக்திவேல் தனது மோட்டார் சைக்கிளில் தர்மகர்த்தா கந்தனை பின்னால் உட்கார வைத்து கொண்டு பெரியசூரம்பாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார். பரமத்திவேலூர் அருகே செஞ்சுடையாம்பாளையம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள தென்னை மரத்தில் மோதியது.

தர்மகர்த்தா படுகாயம்

இந்த விபத்தில் சக்திவேல், கந்தன் ஆகியோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் சக்திவேல் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த கந்தனை டாக்டர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து பரமத்தி போலீசார் சக்திவேலின் உடலை கைப்பற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பாபிஷேகம் நிறுத்தம்

இது ஒருபுறம் இருக்க தர்மகர்த்தா விபத்தில் படுகாயம் அடைந்ததால் நேற்று காலை நடைபெற இருந்த பெரியசூரம்பாளையம் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story