வெண்ணந்தூர் அருகேமரத்தில் கார் மோதி மூதாட்டி பலிமகன் உள்பட 3 பேர் படுகாயம்


வெண்ணந்தூர் அருகேமரத்தில் கார் மோதி மூதாட்டி பலிமகன் உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 May 2023 7:00 PM GMT (Updated: 29 May 2023 7:00 PM GMT)
நாமக்கல்

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அருகே மரத்தில் கார் மோதி மூதாட்டி பலியானார். அவருடைய மகன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஐ.டி. ஊழியர்

கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் பள்ளம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராம்பாபு (வயது 42). பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி திவ்யா (40) என்ற மனைவியும், நிஷாந்த் (18) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் சொந்த ஊருக்கு சென்றிருந்த ராம்பாபு நேற்று முன்தினம் தனது மனைவி, மகன் மற்றும் தாயார் ராஜலட்சுமி (67) ஆகியோருடன் ஒரு காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டார். இந்த காரை ராம்பாபு ஓட்டினார்.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அத்தனூர் அம்மன் கோவில் பகுதியில் நேற்று அதிகாலை வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

மூதாட்டி பலி

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த ராஜலட்சுமி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் ராம்பாபு, திவ்யா, நிஷாந்த் ஆகியோர் படுகாயம் அடைந்து வலியால் துடித்தனர். இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வெண்ணந்தூர் போலீசார் ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story