மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி
x
தினத்தந்தி 2 Jun 2023 7:00 PM GMT (Updated: 3 Jun 2023 7:25 AM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 58). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பரமத்திவேலூர் பகுதியில் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பாண்டமங்கலம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வெள்ளைச்சாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் வெள்ளைச்சாமி நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளைச்சாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றவரை தேடி வருகின்றனர்.


Next Story