பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை


பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Oct 2023 7:30 PM GMT (Updated: 17 Oct 2023 7:30 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள் விதிமீறலில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசினார்.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள் விதிமீறலில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசினார்.

தீ விபத்து தடுப்பு

தர்மபுரி மாவட்டத்தில் தீ விபத்து தடுப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பட்டாசு கடைகளை ஆய்வு செய்யும் நடைமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதையடுத்து கலெக்டர் சாந்தி பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசு கடைகளை கூட்டாய்வு செய்வதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சீன தயாரிப்பு பட்டாசுகள் மற்றும் வெங்காய வெடிகள் விற்பனை, பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் 18 வயதுக்குட்பட்ட தொழிலாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை பணியில் அமர்த்துவது, உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் பட்டாசுகளை இருப்பு வைப்பது ஆகிய விதிமீறல்கள் ஆய்வின்போது கண்டறியப்பட்டால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமீறல்கள் தொடர்பாக சட்ட விதிகளின்படி பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

புகார் தெரிவிக்கலாம்

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதில் தர்மபுரி உதவி கலெக்டர் கீதாராணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிதேவி, கலால் உதவி ஆணையர் கண்ணன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்க மூர்த்தி மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story