கழிவுநீர் அகற்றும் பணியில் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை

கள்ளக்குறிச்சியில் கழிவுநீர் அகற்றும் பணியில் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளுக்கு நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் சுத்தம் செய்வது குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகராட்சி ஆணையர் குமரன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர் கீதா, உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி ஆணையர் குமரன் கூறுகையில், கழிவுநீர் சுத்தம் செய்யும்போது தொட்டியில் இறங்கி சுத்தம் செய்ய அனுமதிக்ககூடாது. பணியாளர்கள் உரிய பாதுகாப்பு கவசம் அணிந்திருக்க வேண்டும். இதனை மீறி செயல்படுவோருக்கு முதல் முறையாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். 2-வது முறையாக 5 ஆண்டு் சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் உரிய பாதுகாப்பு இல்லாமல் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் இப்பணியில் ஈடுப்படுத்திய உரிமையாளரோ அல்லது பணி அமர்த்தியவரோ ரூ.15 லட்சம் இழப்பீடாக உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு வழங்க வேண்டும். கழிவுநீர் அகற்றும் வாகனத்தில் 6 தனிப்படை பாதுகாப்பு உபகரணங்களான பிரிதிபலிப்பு ஆடை, பாதுகாப்பு கண் கண்ணாடிகள், கம்பூட்ஸ், பாதுகாப்பு கையுறை, தலைபட்டை இருப்பதையும், அதை பணியாளர்கள் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு முதல் முறையாக ரூ.25 ஆயிரமும், 2-வது முறையாக ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். கழிவுநீர் வாகனங்களின் சேவைக்கான தேசிய உதவி சேவை 14420 என்ற எண்ணை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பதிவு செய்து உரிமம் பெற்ற வாகனத்தை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெறப்படும் கழிவுநீரினை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார். இதில் அனைத்து பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், அலுவலர்கள், கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் உள்பட பலா் கலந்து கலந்து கொண்டனர்.






