தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்


தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
x

தமிழகத்தில் அதிகரிக்கும் தலித்துகள் மீதான வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண மையத்தின் 2021ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆட்சியாளர்களின் ஆதரவோடு சாதிய வன்கொடுமைகள் நடந்தன. திமுக ஆட்சியில் அந்த நிலை நீடிக்கக் கூடாது. முதல்வர் உறுதியோடு அதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிராக 2019-ஆம் ஆண்டில் 1144 குற்றங்கள் நடந்திருந்தன. 2020-ஆம் ஆண்டில் 1274 வன்கொடுமைக் குற்றங்கள் நிகழ்ந்தன. 2021-இல் தலித் மக்கள் மீதான வன்கொடுமைக் குற்றங்களின் எண்ணிக்கை 1377ஆக உயர்ந்திருக்கிறது. 2021இல் தமிழகத்தில் 53 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 61 தலித்துகளைக் கொலைசெய்ய முயற்சி நடந்துள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவில் தலித் படுகொலைகளில் 2020ஆம் ஆண்டு 5-ஆவது இடத்தை வகித்த தமிழகம் இப்போது 7-ஆவது இடத்தில் இருக்கிறது.

தலித் பெண்கள் மீதான தாக்குதலில் துன்புறுத்துவது, கண்ணியக் குறைவாக நடத்துவது போன்ற குற்றங்களைவிடவும் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது தமிழ்நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டில் 123 தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதாக என்சிஆர்பி அறிக்கை தெரிவித்தது. அதில் 88 பேர் 18 வயதுக்கும் குறைவான சிறுமியர். தலித் சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் இந்தியாவிலேயே 5-ஆவது இடத்தில் தமிழகம் இருந்தது. 2021ஆம் ஆண்டிலும் 123 பேர் அதில் 89 பேர் சிறுமியர் என்றும் என்சிஆர்பி அறிக்கை தெரிவிக்கிறது.

தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதில் தமிழ்நாடு காவல்துறை மெத்தனமாக இருப்பது என்சிஆர்பி அறிக்கையில் தெரியவந்துள்ளது. 2020இல் பதிவு செய்யப்பட்டு அந்த ஆண்டின் இறுதிவரை புலன் விசாரணை செய்யப்படாமல் இருந்த வன்கொடுமை வழக்குகள் 694 எனத் தெரிவிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டின் இறுதியிலோ 825 வழக்குகள் புலன்விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. 2020ஆம் ஆண்டைவிட 2021ஆம் ஆண்டில் கூடுதலான வழக்குகள் விசாரணையின்றி நிலுவையில் உள்ளன.

பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சுமார் 40 சதவீதம் வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதாக என்சிஆர்பி அறிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன், 186 வழக்குகள் தவறான தகவல், போதுமான ஆதாரம் திரட்டமுடியவில்லை எனக் காரணம் காட்டி காவல் துறையால் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரியவந்துள்ளது.

காவல் துறையின் மெத்தனமான போக்கே வன்கொடுமைகள் அதிகரிப்பதற்குக் காரணம் என்பதை என்சிஆர்பி அறிக்கை புலப்படுத்துகிறது. இதை தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தலித் மக்கள்மீதான வன்கொடுமைகளே இல்லாத மாநிலம் என்ற பெருமையைத் தமிழகத்திற்கு உருவாக்கிடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story