முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" என்ற தலைப்பில் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 28-ந்தேதி தொடங்கிய இந்த கண்காட்சியை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், திரைப்பட துறையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை இன்று நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, நடிகர் யோகிபாபு உள்ளிட்டோரும் சேர்ந்து கண்காட்சியை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்த கருத்து தெரிவிக்கும் புத்தகத்தில் எழுதிய ரஜினிகாந்த், "அருமையான சேகரிப்பு, என்ன ஒரு நினைவுகள்" என்று எழுதினார்.

புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:-

"முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சி மிக அற்புதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் வாழ்க்கைப் பயணம், அரசியல் பயணம் இரண்டுமே ஒன்றுதான். அவர் பல்வேறு பதவிகள் வகித்து கடுமையாக உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார். அவரை முதல்-அமைச்சராக்கியது தமிழக மக்கள் அவருக்கு கொடுத்த அங்கீகாரம்."

இவ்வாறு கூறினார்.


Next Story