நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை - சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு


நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை - சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு
x

நடிகர் எஸ்.வி. சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகளை கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

சென்னை,

நடிகரும் பா.ஜ.க. நிர்வாகியுமான எஸ்.வி. சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகளை கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதுகுறித்து பத்திரிகையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பல சட்டப்பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் எஸ். வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

அப்போது பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரமும் தாக்கல் செய்தார். ஆனால் எஸ்.வி.சேகர் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பில் எஸ்.வி .சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான வழக்கை எம். எல். ஏ., எம்.பி. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு ஆறு மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை சிறப்பு கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில் நடிகர் எஸ்.வி.சேகர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே அவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவிட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்ததை அடுத்து சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்தினார்.


Next Story