சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு 2 வாரங்கள் அவகாசம் - சென்னை ஐகோர்ட்டு


சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு 2 வாரங்கள் அவகாசம் -  சென்னை ஐகோர்ட்டு
x

வழக்கு விசாரணையை செப்டம்பர் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

பிரபல நடிகர் விஷால் 'விஷால் பிலிம் பேக்டரி' என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, பிரபல பைனான்சியர் அன்புச்செழியனிடம் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் பெற்றிருந்தார்.

இந்த கடன் தொகையை அவருக்காக லைக்கா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இதையொட்டி நடிகர் விஷாலும், லைக்கா நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கடன் தொகை முழுவதையும் திருப்பிச்செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைக்கா நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஷால் தங்களுக்கு வழங்கவேண்டிய ரூ.21.29 கோடியை வழங்காமல் 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியிட உள்ளதாகவும், சாட்டிலைட் மற்றும் ஓ.டி.டி. உரிமையை விற்க உள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தொடர்பாக பணம் ஏன் கொடுக்க வில்லை என்ற நடிகர் விஷாலின் விளக்கத்தையும், அவரது சொத்து விவரங்களையும் கொண்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் மாதம் 9-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம் நடிகர் விஷால் மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் விஷால் நேரில் ஆஜராகவில்லை. விஷால் தரப்பு வழக்கறிஞர் ஐகோர்ட்டில் விஷாலின் சொத்து விவரங்கள் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மேலும் 2 வாரம் அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட் சொத்து விவரங்களை தெரிவிக்க மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்த விசாரணை வரும் 23-ந் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


Next Story