கூடுதலாக ரெயில் பெட்டிகள் இணைக்க வேண்டும்


கூடுதலாக ரெயில் பெட்டிகள் இணைக்க வேண்டும்
x

காரைக்கால், மன்னை எக்ஸ்பிரஸ்களில் கூடுதலாக ரெயில் பெட்டிகள் இணைக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தி உள்ளது.

திருவாரூர்

காரைக்கால், மன்னை எக்ஸ்பிரஸ்களில் கூடுதலாக ரெயில் பெட்டிகள் இணைக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தி உள்ளது.

மாதாந்திர கூட்டம்

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் மாதாந்திர கூட்டம் மையத்தின் தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். முன்னதாக பொதுச்செயலாளர் ரமேஷ் வரவேற்றார்.

இதில் இணைச்செயலாளர் காளிமுத்து, நிர்வாகிகள் செல்வகுமார், தர்மதாஸ், விஷ்ணுகுமார், தென்னரசு, ஜீவானந்தம், வேதியியலாளர் அகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பொதுமேடை அமைக்க வேண்டும்

திருவாரூர் நகர் பகுதியில் பொதுக்கூட்டம், கட்சி மாநாடு உள்ளிட்ட கூட்டங்களை பொதுமக்கள் பயணம் செய்யும் சாலையில் நடத்தாமல் போக்குவரத்து மற்றும் பொதுமக்களை பாதிக்காத வகையில் மாற்று இடத்தில் நகராட்சி சார்பில் பொது மேடை அமைத்திட வேண்டும். திருவாரூர் நகர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தேரோடும் 4 வீதிகள், கடைவீதி, விளமல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை பாகுபாடின்றி உடனே அகற்ற வேண்டும்.

மழைநீர் சேகரிப்பு தொட்டி

மழைகாலம் என்பதால் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி டெங்கு போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க வடிகால்களை தூர்வார வேண்டும்.

மழைநீர் சேகரிப்பினை முன்னெடுத்திடவும், அனைத்து மாவட்டத்திற்கும் முன்மாதிரியாக திருவாரூர் மாவட்டம் விளங்கிடவும் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டிட வேண்டும்.

கூடுதல் ரெயில் பெட்டிகள்

அதிக அளவில் மக்கள் ரெயிலில் பயணம் செய்வதால் காரைக்கால் மற்றும் மன்னை எக்ஸ்பிரஸ்களில் கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story